‘நல்ல மனிதர்’ என நற்சான்று வழங்கப்பட்ட திரு.வாஜ்பாயியின் ஆட்சிக்காலமான 1999-2004 என்பதுதான் பல்வேறு வகுப்புவாத செயல்திட்டங்களை இந்திய அரசியலில் சோதித்துப் பார்க்க வாய்ப்பேற்படுத்தித் தந்தது. அந்தக் காலத்தில்தான் அணுகுண்டு வெடிப்புச் சோதனை செய்யப்பட்டது; குஜராத் இனப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன; இப்போது இந்திய அரசியலில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான’ அடித்தளமும் அப்போதுதான் அமைக்கப்பட்டது.
இப்போது இந்தியாவில் நிலவும் சூழலைப் பாசிசம் எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் 1930களில் இத்தாலியில் முசோலினியால் பேசப்பட்ட பாசிசத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. ஒற்றுமைகளும் உள்ளன. யூதர்களை அழித்தொழித்தது போல சிறுபான்மை மதத்தவரை அழிக்கப் பார்க்கிறார்கள் – அதில் ஒற்றுமை இருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பகைவர்களைக் கட்டியமைக்கிறார்கள்; அதில் ஒற்றுமை உள்ளது. ஆனால் அந்தப் பாசிசத்தைப்போல இது இன்னும் ராணுவத்தைப் பயன்படுத்தவில்லை.
ஹிட்லருக்கும், முசோலினிக்கும் நாடு பிடிப்பதற்கான தேவை இருந்தது, சந்தை தேவைப்பட்டது. ஆனால் ஒரு துருவ உலகமாக மாறிவிட்ட இன்றைய இன்றைய சூழலில் வகுப்புவாத பாசிசத்துக்கு அது தேவையில்லை. இங்கே அவசரப்படாமல் பொறுமையாக ஓரு பாசிச அரசைக் கட்டியெழுப்ப அது விரும்புகிறது. அதற்காகச் சிவில் சமூகத்தில் மெள்ள மெள்ள வகுப்புவாத நஞ்சு ஊட்டப்படுகிறது. இது பாசிசமல்ல சனாதன பயங்கரவாதம்!
Reviews
There are no reviews yet.