ரவிக்குமார் ஒரு கட்டுரையாளராகவே நிலைபெற்றிருந்தாலும், இந்தக் கதைகள் புனைவுதளத்திலும் அவரது ஆற்றலை வெளிப்படுத்துவதோடு, ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய அனுபவமாகவும் அமைந்துள்ளன. தமிழ் மக்களின் சமூக, அரசியல் வாழ்வின் சில ஆதாரமான கூறுகளை, இந்தக் கதைகள் சமகாலப் புனைவு மொழியின் பசுமையோடும் நுட்பத்தோடும் பதிவுசெய்கின்றன.
தலித் இலக்கியம் அதன் உட்பொருளில் பின் நவீனத்துவக் கூறுகளையும், பின் நவீனத்துவ உருவம் அதன் உட்கிடையாகத் தலித் வாழ்வின் கலக உணர்வையும் கொண்டது. தமிழ்ச் சூழலில் இந்த இருவேறு ஓடைகளது இசைவின் சாத்தியக் கூறுகளைக் கூர்மையான இலக்கிய உணர்வோடு பரிசீலித்து அதில் வெற்றியும் அடைந்தவர் ரவிக்குமார்.
இலக்கியத்தின் வினையாற்றும் சக்தி குறித்த நமது நம்பிக்கைகளும், கற்பிதங்களும் வெகுவாக நெகிழ்ந்துவிட்ட இன்றைய சூழலில், ரவிக்குமார் தனது கதைகள் வாயிலாக முன்வைக்கும் முனைப்புகளும், அக்கறைகளும் நமக்குள் தீவிரமான ஒரு சலனத்தை ஏற்படுத்த விழைகின்றன.
திலீப்குமார்
___________
நுண்ணறிவும், ஆழமும் அகலமும் மிகுந்த நூலறிவுடன், பொதுத்தள அறிவுஜீவியாக (public intellectual) இருப்பதோடு மட்டுமல்லாமல், சமூக நலப் போராளியாக விளங்கும், நண்பர் ரவிக்குமாரின் கன்னிச் சிறுகதைத் தொகுப்பு இது.
கவிதை நயமும், உள்ளார்ந்த நகைமுரணும்கூடிய இக்கதைகள் சமூக அக்கறையை உள்ளீடாகப் புலப்படுத்துகின்றன.
‘அறம்’ என்பதற்கு அதனளவில் பரிபூரணமான அர்த்தம் ஏதுமில்லை, அந்தந்தக் காலத்து சமூகப் பின்னணியில்தான் பொருள்கொள்ள வேண்டும் என்பதுதான் கதைகளின் அடிநாதம்.
இந்திரா பார்த்தசாரதி
_________
கதைகள் என்றால் “மனிதர்களின் சாயல் கொண்ட பாத்திரங்களின் நிழலுருவங்களும், அவை உழலும் வெளியும் விரிவாகப் பேசப்பட வேண்டும்” என்ற பொது விதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வாசித்துப் பார்த்து இவ்விரண்டு கூறுகளும் எழுதப்படாமல், ஒற்றை மனிதர்களின் மனவெளியே அதிகம் எழுதிக் காண்பிக்கின்ற பிரதிகளாக அவை தோன்றின. ஒரு குறிப்பிட்ட கணத்தில் நாம் சந்திக்கும் ஒரு மனிதனின் தவிப்பை அல்லது அப்படியான சந்திப்பினால் நமது நகர்வு சாத்தியப்படாமல் போன நிலையை எழுதுவதற்கு ஏற்ற வடிவம் கவிதை என அறிந்திருந்ததால், இந்தப் பிரதிகள் எல்லாம் கவிதையாக எழுதப்பட்டிருக்கின்றனவோ என்ற ஐயமும் தோன்றியது.
அ.ராமசாமி
Reviews
There are no reviews yet.